அவனுக்குள்
கண்மூடிக்கிடக்கும் அந்த
மிருகத்தை ரகசியமாய்
நான் நேசிக்கிறேன்.
ரத்த ருசி அறியாத
அந்த மிருகத்தை
என்னையும் அறியாமல்
நான் ஆட்டிவைக்கிறேன்.
பொதுமை என்ற பெயரில்
அவனுக்கு வீசப்படும் சாமரங்களை
பிய்த்து எறிவதிலும்,
அவன் நேசிக்கும்
கண்ணாடிகளை உடைத்து
எறிவதிலும் விருப்பமில்லை.
எனக்குள்ளும்
மிருகம் இருப்பதாகவே
அவன் நம்புகிறான்.
எனக்காக
வீசப்படும் சாமரங்களை
அவன் கண்டும் காணாதவனாய்
இருக்கிறான்.
இப்படித்தான்
நாங்கள் ஒருவரை ஒருவர்
அப்படியே ஏற்றுக்கொண்டோம்
எங்கள் சாம்ராஜ்ஜியத்துக்கு
உட்பட்ட எல்லைக் கோட்டைத்
தாண்டி அந்நியர் நுழையாத படி
இரவு பகலாகத் தனித்தனியாக
காவல்காத்துத் திரிகிறோம்
அவரவர்களுக்கான அந்தரங்கங்களை
மெல்லிய திரைப்போட்டு மூடியே காக்கிறோம்
திரை ஒருவரை ஒருவர்
வியந்துகொள்ளவும் அங்கீகரிக்கவும்
முயல்கிறது.
அந்தத் திரை நிழலில்
மிருகம் கால் பரப்பி
ஏகாந்தமாய் உறங்குகிறது.
அதையும் தாண்டி
ஒரே நேர்கோட்டில் சந்திக்காத
நாங்கள் எங்களைச் சமமானவர்களாகவே
பிரகடனப்படுத்துகிறோம்.
No comments:
Post a Comment