நீண்ட நெடிலுக்குப் பின்னால்
தனித்து விட்ட ஒற்றாய்
காற்றில் படபடக்கும் இதயப் பக்கங்களில்
முகவரி தேடும் நான்.
கூடு விட்டு,கூடு பாயாமல்,
பச்சோந்தியாகவும் மாறாமல்,
மாறி மாறி உருவம் தேடும்,
சொந்த முகத்தைத் தொலைத்தவள்.
துருப்பிடித்த இதயச் செல்களை
உரித்து,உரித்து தேடிய
ஒற்றை உயிரணு
ஒளிந்து கொண்ட நேற்று வந்தவர்கள்
விடாது விரட்டும் நாளை வருபவர்கள்
ஓடியோடி களைத்த கண்ணாம்பூச்சி விளையாட்டில்
உப்புக்குச்சப்பாணி.
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும்
எனக்குப் பின்னால் விரிகிறது, விசித்திர உலகம்-அதில்
நீர்பட்டு கலைந்த கண்ணாடி ஓவியமாய்
நடந்ததெல்லாம் நல்லதுக்காக
தொலைந்து போனது - நான்
மட்டுதான்.
நான், புரியாத கேள்வியும் இல்லை;
புரிகின்ற விடையும் இல்லை.
No comments:
Post a Comment