Wednesday 25 January 2017

தாஜ்மகால்


காதல் என்பார்கள் கட்டிப்பிடிப்பார்கள்
கட்செய்தால் காட்டுவதா தாஜ்மகால்?


இரண்டாம் முறையாக மூன்றாம் தாரமென
முத்துகளைப் புறந்தள்ளியே உதிர்ந்துபோன
சிப்பியின் நினைவாலயமா தாஜ்மகால்?


வரலாற்று கருப்புப் பக்கங்களை வெள்ளைப்
பக்கங்களாக்கிய கலைச்சின்னமா தாஜ்மகால்?


சிதைக்கப்பட்ட கைகளின் வழியே வடிக்கப்பட்ட
உதிரத்தின் காவியமா தாஜ்மகால்?


விசுவாசம், விசுவாசம் என்று வளைக்கப்பட்ட
உழைப்பாளிகளின் மணிமகுடமா தாஜ்மகால்?


அதிகார வர்கத்தின் புகழுக்கு இட்ட
ராஜமுத்திரையா தாஜ்மகால்?


சொல்லப்படாத வரலாற்றையும் எழுதப்படாத
காப்பியங்களையும் கால வெள்ளத்தைக்

கடந்து யமுனையோடு காது
கொடுத்துக் கேட்டுப்பாருங்கள்

மனிதன் கடந்து வந்த, கடக்கவிருக்கும்
வாழ்க்கை பாதையின் மைல் கல்லே

தாஜ்மகால்.

No comments:

Post a Comment