Wednesday 25 January 2017

அவனே என் தோழன்

என் படுக்கை வரை பயணிக்கும்
இரவல் தோழன் இவன்
அவன் சுகந்தத்தைச் சுவாசித்தே
பரிமளிப்பவள் நான்

என் தலையணை மட்டும் அறிந்த
ரகசியங்கள் அறிகிறவன்
சதா என் மனவெளியில்
உலவிக்கொண்டு இருப்பவன்

என் விரல்களை முத்தமிட்ட
படியே நடை பயில்விப்பவன்
இமைகள் படபடக்கும் அந்த
நொடிப் பொழுதும் என்
கருவிழிகளோடு இயைந்தே
பயணிப்பவன்

என் குறைகளை அறிந்தவனாகவும்
கலக்கங்களைத் தெளிவிப்பவனாகவும்
என் சுயத்தைக் காத்து
இடித்துரைப்பவனாகவும்

என் மெளனத்தை உடைப்பவனாகவும்
பேசியே என்னை மெளனத்தில் ஆழ்த்துபவனாகவும்
ஊடலையும் உவகையையும் மாறித் மாறி
தருபவனாக இருக்கிறான்

நானும் அவனும் வேறுவேறு
பாலினமாய் இருந்தபோதும்
வெறுப்பை உமிழவோ
ஆதிக்கம் செலுத்தவோ
மட்டம் தட்டவோ இவன்
முயல்வதில்லை

எந்த முன்னுரிமையும் எடுக்காமல்
எனக்கான வெளிகளை அப்படியே
விடுகிறான்

என் மடிமீதும் மார்மீதும் உறங்கும்
கோடுதாண்டா அஃறிணை உயிர்
இவன்

மூன்றே வாரம் என்னுடன் பயணிக்கும்
பொது நூலகத்து நூல் அவன்

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வழக்கமான காதல் கவிதைன்னு நினைச்சி படிச்சேன்! ஹா...ஹா.... கடைசியில் செம ட்விஸ்ட்.

    ReplyDelete