எதற்காகவோ
எதை எதையோ கற்றேன்
எல்லாவற்றையும்
சேர்த்தேன்.
ஏனோ எல்லாம்
மறந்தேன்
எல்லாவற்றையும்
இழந்தேன்.
புரிவதற்கு
ஏதோ உள்ளபோதும்
அதையும் தாண்டி
நான் மிச்சமிருக்கிறேன்.
காற்றோடும்
புழுதியோடும் கலந்துவிட்ட
மூதாதயர்களின்
மூச்சுக் காற்றிலும்,
காலடித்தடத்திலும்
பாழடைந்த சங்கத்துக்
கிணற்றின் அரவத்திலும்
வயல் வெளியாய்
வாழ்ந்து வானம் பார்த்து
கிடக்கும்
பார்த்தினியா காட்டிலும்
டைல்சுக்கு
ஊடே இருக்கும்
குலசாமியின்
கண்களிலும்
இன்னும் இன்னும்
உள்ளபோதும்....
அதையும் தாண்டி
எம்பி பிடிக்கும்
தூரத்தில்
நான் மிச்சமிருக்கிறேன்.